கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டட கட்டுமான பணிகள் மும்முரம்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு

சென்னை: கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டட கட்டுமான பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் 2021ம் ஆண்டு முதல் கொளத்தூரில் நடத்தப்பட்டு வரும் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது தற்போது தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினால் இந்த கல்லூரிக்கு ரூ. 25 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கு கடந்த 2024ம் ஆண்டு டிச.23ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தரை மற்றும் நான்கு தளங்களுடன் கூடிய புதிய கட்டடத்தில் 24 வகுப்பறைகள், ஆய்வகங்கள், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் அறை, நிர்வாக அலுவலகம், நூலகம், சிற்றுண்டிச் சாலை மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *